Home நாட்டு நடப்புக்கள் அடுத்த ஆண்டில் 18 சதவீத வட் வரி.. இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அடுத்த ஆண்டில் 18 சதவீத வட் வரி.. இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பெறுமதி சேர் வரியான வட் வரியை விதித்த பின்னர், தற்போது 346 ரூபாயாக விற்கப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல் 62.28 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 408.28என்ற புதிய சில்லறை விலையில் விற்கப்படும்.

அதேநேரம் ஒரு லீட்டர் டீசல் 59.22 ரூபாவினால் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 388.22 ஆக விற்பனை செய்யப்படும்.

தற்போது, அரசாங்கம் சமூக பாதுகாப்பு வரி, மதுவரி, சுங்க வரி மற்றும் துறைமுக பாதுகாப்பு வரி என நான்கு வகையான வரிகளை வசூலிக்கிறது.

இந்தநிலையில் மின்சார கட்டணத்தில் வரி சேர்க்கப்படாது என அரசு கூறுகிறது. ஆனால், நாட்டின் மொத்த மின் உற்பத்திக்கு 40 சதவீதம் எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. எனவே டீசல் மீதான வட் வரி விதித்தப்பட்ட பின்னர், மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்திற்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களும் நிச்சயமாக அதிகரிக்கும்.

மின்சாரம் சரிசெய்தல் கட்டணத்தை இணைத்து ஒரு சூத்திரத்தின்படி குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

எனவே டீசல் விலை 59.22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் பின்னர், நீர் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும். இதேவேளை, உள்நாட்டு சமையல் எரிவாயுவிற்கும் வட் வரி விதிக்கப்படும்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 680 ரூபாவுக்கும் அதிகமான விலை உயர்த்தப்படும்.

எவ்வாறாயினும், ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியை அதிகரித்து, மக்களை நரகத்தில் தள்ளும் நிலைக்கு ராஜபக்சர்கள் கொண்டுசென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.