Home இலங்கை செய்திகள் மன்னாரில் துப்பாக்கி சூடு-வீதியை மறித்த மக்கள்-பரபரப்பு தகவல்..!{படங்கள்}

மன்னாரில் துப்பாக்கி சூடு-வீதியை மறித்த மக்கள்-பரபரப்பு தகவல்..!{படங்கள்}

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில்  இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

இன்று திங்கட்கிழமை  (19) காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த   விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில்  வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக  துப்பாக்கி மூலம் அந்த விவசாயி மீது சுட்ட போதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் உயிரிழந்துள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப் பட்டும் அதையும் மீறி  குறித்த சம்பவம் தொடர்வதாகவும்,இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகள் ஏந்தி   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில்  ‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன்   தொடர்புடைய  சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும்  உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும்,பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் துப்பாக்கி சூடு-வீதியை மறித்த மக்கள்-பரபரப்பு தகவல்..!{படங்கள்}-oneindia news
Exit mobile version