Home இந்திய செய்திகள் இலங்கையில் 10000 வீடுகள்-வெளியான மகிழ்ச்சி தகவல்..!

இலங்கையில் 10000 வீடுகள்-வெளியான மகிழ்ச்சி தகவல்..!

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பிரதான நிகழ்வு இன்று (19) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்று(19) நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழாவும் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.

இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.